Thursday, June 13, 2013

இலங்கை முஸ்லிம்கள் மாடு, ஆடுகளை அறுப்பது உயிர்வதையா..?

(இலங்கை மக்களுக்கு மத்தியில் இனத் துவேஷத்தைப் பரப்புவோர் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் சில குற்றச் சாட்டுக்களை முன் வைத்து பரப்பி வருகின்றார்கள். அதற்குறிய பதிலை நாம் தொடராக வெளியிட்டு வருகின்றோம். அதன் அடிப்படையில் இருதின பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட முஸ்லிம் அரசியல் அப்பாவித்தனமானதா? என்ற கட்டுரைக்கான பதிலை நாம் வெளியிட்டிருந்தோம். அதன் தொடரில் குர்பானி தொடர்பாக வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு இப்போது பதில் தருகின்றோம்).

இஸ்லாமியர்களின் வாழ்வியல் முறையில் குர்பானி – இறைவனுக்காக அறுத்துப் பலியிடுதல் என்பதும் ஒன்றாகும். இப்றாஹீம் – ஆப்ரஹாம் என்ற நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக புனித ஹஜ்ஜுடைய காலத்தில் முஸ்லிம்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை அறுத்து பலியிடுவார்கள். இது இறைவனின் கட்டளையை செயல்படுத்தும் முறையாகும். நிலைமை இப்படியிருக்க தற்போதைய இலங்கையில் இது தொடர்பாக இரண்டு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குர்பானி என்ற பெயரில் முஸ்லிம்கள் பிரானிகளை உயிர் வதை செய்கின்றார்கள். குர்பானிக்காக ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டில் இருந்து சுமார் 30 கோடி அளவுக்கான பணம் இவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது.

இந்த இரண்டு விமர்சனங்களுக்கும் அறிவார்ந்த ரீதியில் நாம் பதில்களை தரவிருக்கின்றோம்.

குர்பானிக்காக பிராணிகளை அறுப்பது உயிர்வதை செய்வதாக ஆகுமா?

இந்தக் குற்றச்சாட்டுக்குறிய பதிலைப்
பார்ப்பதற்கு முன்பாக சில அடிப்படை விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். உயிர் வதை என்ற காரணத்திற்காகத்தான் குர்பானிக்கு ஆடு, மாடுகளை அறுப்பதை இவர்கள் தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்புகின்றார்கள் என்றால், இதே காரணத்தை ஏன் மற்ற விளங்குகள் உயிரினங்கள் விஷயத்தில் இவர்கள் முன் வைப்பதில்லை? உண்மையில் உயிர் வதையைத் தடுப்பதுதான் இவர்களின் நோக்கம் என்றால் இறைச்சிக்காக கோழி அறுப்பதை இவர்கள் ஏன் தடுக்க முன்வரவில்லை? பன்றி அறுப்பதை இவர்கள் ஏன் தடை செய்யவில்லை? மீன் பிடிப்பதை ஏன் தடுக்கவில்லை? கோழி, பன்றி மீன் போன்றவை இவர்களின் பாணியில் உயிர்கள் இல்லையா?

உயிர் வதை செய்யப்படுகிறது என்ற காரணத்திற்காக மாடு அறுப்பது தடை செய்யப்பட்டால் நாம் மேற்கூறிய அனைத்துக்கும் அந்தச் சட்டம் போடப்படவேண்டுமே? அது மட்டுமா? இலங்கையில் டின் மீன் உற்பத்தி, கருவாடு, மாசி உற்பத்தி இறக்குமதி அனைத்தையும் தடுக்க வேண்டும். இலங்கையில் உணவுக்காக அன்றாடம் மீன்களும், கோழிகளும் கொல்லப்படுவதுடன் குஞ்சுகளாக உருவாக இருக்கும் இலட்சக் கணக்கான முட்டைகளும் கலைக்கப்பட்டு உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றது. இவற்றுக்கும் இவர்கள் தடை விதிக்கக் கோரிக்கை வைப்பார்களா?

இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என பாடுபடுபவர்கள் KFC மற்றும் CARGILLS போன்ற நிறுவனங்களையும் மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்காதது ஏன்?

ஆடு, மாடு அறுப்பதைத் தடுப்பதற்கு இவ்வளவு முக்கியத்துவம்
வழங்கும் இவர்கள் இறைச்சியை சமைத்து வியாபாரம் செய்யும் பிரபல கம்பனிகளான கே.எப்.சி. மற்றும் மெக்டொனால்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை மூட ஆவன செய்வார்களா? கடந்த 18-09-2011 ம் தேதி வெளிவந்த ராவய பத்திரிக்கையின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில தகவல்களை இங்கு நாம் சுட்டிக்காட்டுவது சிறப்பாக இருக்கும்.

குழந்தைப் பருவத்தில் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு விலங்குப் புரதம் அத்தியவசியமானது என விஞ்ஞானம் தெரிவிக்கின்றது. மக்களின் இன ரீதியிலான கலாசாரத்துடன் இணைந்ததாக உணவுக் கலாசாரமும் உள்ளது. 
  • முஸ்லீம் மக்கள் பன்றி இறைச்சியை உண்ணாவிட்டாலும், மாட்டிறைச்சியை உண்ணுகிறார்கள். 
  • இந்துக்கள் மாட்டிறைச்சியை உணவுக்காகப் பயன்படுத்தாவிட்டாலும், ஆட்டிறைச்சி, கோழியிறைச்சி போன்ற வேறு வகை இறைச்சிகளை உணவுக்காகப் பயன்படுத்துகின்றார்கள். 
  • பௌத்தர்களிலும் முற்று முழுதாக மீன், இறைச்சி சாப்பிடாதவர்களின் எண்ணிக்கை குறைவு.
  • கொரிய மக்கள் நாய் இறைச்சியை மிகவும் ருசியான உணவாகக் கருதுகிறார்கள். 
  • தாய்லாந்து புத்த மதத்தைப் பின்பற்றக் கூடிய நாடாகும் ஆனால் அந்நாட்டு மக்கள் நல்ல பாம்பு, கண்ணாடி விரியன் போன்ற விஷ ஜந்துக்களையும் உணவாக எடுக்கிறார்கள். 
  • பிரான்ஸ் நாட்டவர்கள் தவளையை உணவாக உட்கொள்வதுடன்
  • சீனர்கள் சங்கட்டையை உணவாக உட்கொள்கிறார்கள். 
  • ஜப்பானில் மிகவும் விலை உயர்ந்த உணவாகக் கருதப்படுவது மாட்டிறைச்சியாகும். ஜப்பானியர்கள் சமைக்காத மீன்களை (பச்சையாக) உணவாக உட்கொள்கிறார்கள். 
  • வியட்னாமைச் சேர்ந்தவர்கள் ஈசல், கரப்பான் போன்றவற்றை உணவாகக் கொள்கிறார்கள். 
  • இந்தியாவில் ஒரு கூட்டத்தினர் எலிகளை ருசியான உணவாக உண்கிறார்கள்.
பல்வேறு இன மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களும் பல்வகையானதாகும். சிரேஷ்ட தரத்தில் கணிக்கக் கூடிய பௌத்த அரசர்கள் கூட வேட்டையாடினார்கள். வேட்டை இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பண்டைய எல்லாக் கிராமங்களிலும் குளங்கள் காணப்பட்டன. குளத்து மீன்கள் கிராமத்தில் இருந்து சகலருக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்பட்டன. அதில் பௌத்த பன்சலைக்கும் ஒரு பங்கு வழங்கப்பட்டது. அநாவசியமாக மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களில் கை வைப்பது ஆரோக்கியமான விஷயமாகக் கருத முடியாது. அவ்வாரான செயல்கள் பல் வகை உணவுப் பழக்க வழக்கங்களைக் கொண்ட மக்களை இம்சிக்கும் செயலாகும்.

இலங்கையிலும் பல்வேறு இனத்தவர்கள் சமயங்கள் பேரில் தாக்கத்தை உண்டாக்கக் கூடிய சிக்கலான பிரச்சினைகளின் போது தீப்பற்றி எறிய வைக்கும் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். என்று ராவய பத்திரிக்கை தனது ஆசிரியர் தலையங்கக் கருத்தை வடித்துள்ளது. மேற்கண்ட ராவய பத்திரிக்கையின் ஆசிரியர் தலையங்கத்தின் கருத்தை அனைவரும் தெளிவாக விளங்க முடியும். எந்தவொரு நாடாக இருந்தாலும் அந்நாட்டில் ஏதோ ஒரு விதத்தில் விளங்கின் இறைச்சி உணவாக உட்கொள்ளப்படுகின்றது. உட்கொள்ளப்படும் விளங்கு ஆடு, மாடு, ஒட்டகமாகவோ, நாய், பன்றி, பாம்பாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இலங்கை தவிர்ந்த பௌத்த நாடுகளிலும் உணவுக்காக உயிரினங்கள் கொள்ளப்படுவது வழக்கமாகவே உள்ளது.

இலங்கையில் நாளாந்தம் நூற்றுக் கணக்கான சட்டவிரோத கருக்கலைப்புகள் நடந்தவன்னம் உள்ளன. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களே அழிக்கப்படும் நிலை உள்ளது. உயிர் வதைக்கு எதிராக குரல் எழுப்பும் இவர்கள் ஏன் இதனைத் தடுப்பதற்கு முன்வருவதில்லை? உயிர் வதை பற்றிப் பேதும் பௌத்த தலைவர்கள் மற்றும் அரசியில் பிரமுகர்கள் தலை நகரம் முதல் கிராமங்கள் வரை பரவிக்கிடக்கும் உல்லாச விடுதிகள் விபச்சாரத் தளங்களை மூட வேண்டும் என்று குரல் கொடுப்பார்களா? இது வரைக்கும் இதற்கெல்லாம் வாய் திறக்காதவர் மாடறுப்பு விஷயத்திற்கு மாத்திரம் துள்ளிக் குதிக்கிறார் என்றால் இனவாதத்தை தூண்டுவதற்கான முயற்சியாக இது இல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

மாடறுப்பதை மாத்திரம் தான் புத்த மதம் தடை செய்ததா?

தாங்கள் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் என்பதினாலும், புத்த மதத்தின் கருத்துப்படி உயிர் வதை செய்யக் கூடாது என்பதினாலும் தான் மாடறுப்பதைத் தாங்கள் தடுப்பதாக சில பௌத்த பிக்குகள் இன்று பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். உண்மையில் புத்த மதம் மாடறுப்பதை பற்றியா பேசுகிறது என்றால் இல்லை. புத்த மதத்தின் தீர்ப்பின் படி எந்த ஒரு உயிரினத்தையும் கொல்லக் கூடாது அன்பு காட்ட வேண்டும். புத்த மதம் பசுவை மாத்திரம் எந்த இடத்திலும் சிறப்பித்துக் கூறவே இல்லை. உண்மையில் புத்த மதத்தில் உயிர் வதை கூடாது என்பதினாலும், தாங்கள் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் என்பதினாலும் தான் மாடருப்பைத் தடுக்கும் காரியத்தில் இவர்கள் இறங்கியிருக்கிறார்கள் என்றால் நாம் மேலே சுட்டிக் காட்டியதைப் போல் எந்த ஒரு உயிரினத்தையும் கொல்வதற்கு இவர்கள் அனுமதிக்கக் கூடாது.

மொத்தத்தில் இவர்களின் மாடறுப்பு தொடர்பான வாதத்தை நோக்கும் போது இது உயிர் வதை தொடர்பான பிரச்சினையல்ல மாறாக மாடு அறுப்பது மாத்திரம் தான் இவர்களுக்கு பிரச்சினை என்பதும், இவர்களின் பார்வையில் உயிர் வதை என்பதும் தெளிவாக விளங்குகிறது.

இஸ்லாமிய முறைப்படி உணவுக்காக விலங்குகளைக் கொல்வது உயிர் வதை செய்யும்பாவமா?

தாவரங்களுக்கு மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) இல்லாததால் அவை வலியை உணர முடியாது. உணவுக்காகக் கொல்லும் போது தாவரங்களுக்கு வலிப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கு மைய நரம்பு மண்டலம் (Central Nervous System) இருப்பதால் அவைகளால் வலியை உணர முடியும். அதனால் உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவம் என்று வாதிடுகிறார்கள். மனிதர்கள் விலங்குகளை கொல்வது குறிப்பாக முஸ்லிம்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை கொன்று உண்பதினால் அவற்றுக்கு வலி ஏற்படுகின்றது இப்படி செய்வது உயிர் வதை என்றும் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள். உயிர் வதை தொடர்பாகவும், விலங்குகளுக்கு ஏற்படும் வலி தொடர்பாகவும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

முதலில் விலங்குகளுக்கு அவற்றை அறுக்கும் போது வலி ஏற்படுகின்றது என்ற காரணத்தினால் தான் அவற்றை அறுப்பதை இவர்கள் தடை செய்வார்கள் என்றால் அதற்கும் தெளிவான பதில் இருக்கின்றது. காரணம் நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆடு மாடுகளைக் கூட வலியை உணராத வகையில் மயக்க நிலைக்குக் கொண்டு சென்று அறுக்க முடியும். அப்படி அறுக்கப்படும் உணவை இவர்கள் உண்பதற்குத் தயாரா? விலங்குகளுக்கு வலி ஏற்படுவதினால் தான் உயிர் வதை என்று பிரச்சாரம் செய்வார்கள் என்றால் அவர்களின் பிரச்சாரமே தவறானதாகும். அவர்கள் உண்மையில் ‘வலியை உணராத வகையில் பிராணிகளை நாம் அறுத்து உண்போமே’ என்று தான் பிரச்சாரம் செய்யவும் வேண்டும் அது போல் தாமும் உண்ண வேண்டும்.

ஆனால் அவ்வாறு உண்ண மாட்டார்கள். உண்ணக் கூடாது என்றே கூறுவார்கள். அப்படியென்றால் வலியை உணர்வது பற்றி எடுத்துக் கூறி வித்தியாசப்படுத்துவது போலித்தனமானது. இவர்களின் வாதப்படி மனிதனைக் கூட வலியை உணராத வகையில் ஒருவன் கொலை செய்தால் அது பாவமில்லை என்று ஆகிவிடும் அல்லவா? வலியை உணராத வகையில் மனிதனை இன்றைக்குக் கொலை செய்வது சாத்தியமான ஒன்றுதானே? இதெல்லாம் குற்றம் என்று கூறுவார்களானால் வலியை உணர்வது என்ற காரணம் பொய் என்பது தெளிவு. ஒரு உயிரை எப்படி எடுக்கலாம் என்ற உள்ளுணர்வு தான் அசைவத்தைத் தவிர்க்கத் தூண்டுகிறது.

இந்தக் காரணம் தாவரத்திலும் இருக்கிறது. தாவரம் என்ற உயிரை – அது வலியை உணரா விட்டாலும் – கொல்வதும், சாப்பிடுவதும் என்ன நியாயம் என்ற கேள்வி விடையின்றி அப்படியே தான் உள்ளது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அறிவியல் முடிவின் படி இஸ்லாம் கூறும் முறையில் பிராணிகளை அறுத்தால் அவை தாவரங்களைப் போலவே வலியை உணராது. 

உணவுக்காக விலங்குகளையும், பறவைகளையும் கொல்லுவதற்கு பலரும் பலவிதமான வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர். சிலர் கோழி போன்ற பறவையினங்களை நீரில் அழுத்தி திக்குமுக்காட வைத்து கொல்லுகின்றனர்.
மேலைநாடுகளில் கிட்டத்தட்ட இதே முறையில் விலங்குகளை கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு அவைகளை நிலைகுலையச் செய்து கொல்லுகின்றனர். 

மனிதர்களுக்கு வாழ்க்கையின் எல்லாத் துறையிலும் இஸ்லாம் வழிகாட்டியிருப்பது போல் இந்தத் துறையிலும் – அதாவது உயிரினங்களை உணவுக்காகக் கொல்வதிலும் – திட்டவட்டமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறது. இறந்து போன பிராணிகளையும், பிராணிகளின் ஓட்டப்பட்ட ரத்தத்தையும் இஸ்லாம் தடை செய்கிறது. பிராணிகளைக் கொல்லும் போது கூரிய ஆயுதம் கொண்டு கழுத்தை அறுத்து அவைகளைக் கொல்லும் படி பணிக்கிறது. அப்படிச் செய்யும் போது தலைக்கு ரத்ததைக் கொண்டு செல்லும் ரத்த நாளமும், ரத்தத்தை தலைப் பகுதியி லிருந்து வெளிக் கொண்டு வரும் ரத்தக் குழாய்களும் அறுக்கப்படுவதோடு சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாய் முதலியவை ஒரு சேர அறுக்கப்பட்டு விடுகின்றன. அதன் காரணமாக அறுக்கப்பட்ட உடலிலிருந்து ரத்தம் முற்றிலுமாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் அடுத்த சில வினாடிகளில் வலிப்பினால் அவைகள் துடிக்கின்றன. (வலியினால் அல்ல. மன நோயாளிகளுக்கு சிகிச்சை அழிக்கப்படுகையில் அவர்கள் துடிப்பது வலியினால் அல்ல, மாறாக வலிப்பினால். வலிப்பானது நரம்புத் தொகுதியில் ஏற்படும் அசாதாரண நிலைகளின் போது ஏற்படுகிறது)

இதனைக் காணுகின்றவர்கள்தான் இஸ்லாமிய முறை பிராணிகளை வதை செய்யும் முறை என்றும் அது மனிதாபிமான செயலுக்கு ஏற்றதல்ல என்றும் வாதிடுகின்றனர்.

அவர்களின் இந்த குற்றச்சாட்டு உண்மை தானா? இஸ்லாம் சொல்லும் ஹலால் வழியை விடவும் மற்றவர்கள் உயிர்களை (ஆடு, மாடு, ஒட்டகம், கோழி, பறவைகள் போன்ற அனைத்தையும்) கொல்வதற்கு கையாளும் முறை சிறந்தது தானா? அம்முறையைக் கையாள்வதால் உயிரினங்கள் வலியின்றி துன்பப்படாமல் இறக்கின்றனவா? அப்படிக் கொல்லப்படும் விலங்குகளின் மாமிசம், இரத்தம் ஓட்டப்பட்ட ஹலால் மாமிசத்தை விடவும் உண்ணுவதற்கு ஏற்றத் தகுதியை அடைகிறதா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காணும் நோக்கில் ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆகியோர்கள் ஆவார்கள். அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.
  1. முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.  
  2. அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக்கருவிகள் பொருத்தப்பட்டன. 
  3. உணர்வு திரும்பியதும். முழுவதுமாக குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன. 
  4. அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன. 
  5. மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மற்றவர்கள் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன. 
  6. பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் EEG மற்றும் ECG பதிவு செய்யப்பட்டன. 
(அதாவது EEG மூளையின் நிலையையும், ECG இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.)

இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.

இஸ்லாமிய ஹலால் முறை:
  • இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு EEG யில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது. 
  • மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை EEG பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது. 
  • மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் EEG பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது. 
  • மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

மற்ற (இஸ்லாம் தவிர்ந்த பொதுவான) முறை:
  • மேற்கண்ட முறையில் கொல்லப்பட்ட விலங்குகள் உடனே நிலை குலைந்து உணர்வற்ற நிலைக்குப் போகின்றன. 
  • அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை EEG பதிவு காட்டியது. 
  • அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடல் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை. (ஏனெனில் அதிகமான நுண்கிருமிகள் இரத்தத்திலேயே உள்ளன)
மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது. ஹலால் முறையில் உயிர்கள் கொல்லப்படும் போது அவை வலி அல்லது வதையினால் துன்பப்படுவதில்லை. இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை ஒன்றை நாம் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் இரக்கத்தையும், கருணையையும் நாடுகிறான். ஆகவேநீங்கள் (விலங்குகளை) அறுக்கும் முன் உங்கள் ஆயுதத்தை நன்றாக (தீட்டி) கூராக்கிக்கொள்ளுங்கள். இதன் மூலம் அறுக்கப்படும் பிராணிக்கு துன்பத்தை நீக்குங்கள். (முஸ்லிம்: 3615)

அறுக்கப்படும் பிராணிக்கு வலி ஏற்படுகின்றது என்ற காரணத்தினால் தான் மாடு போன்ற பிராணிகளை முஸ்லிம்கள் அறுப்பதை இவர்கள் தடை செய்வார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டதை அவர்கள் தாராளமாக உண்ணலாம். காரணம் இஸ்லாமிய முறைப்படி அறுக்கும் பிராணிக்கு எவ்வித வலியை ஏற்படுவதில்லை என்பதே நிரூபிக்கப்பட்ட அறிவியலின் முடிவாகவும் இருக்கின்றது.

அவர்கள் கூறுவது போலித்தனமான வாதம் என்பதற்கு மற்றொரு சான்றையும் காட்ட முடியும். உயிர் வதை என்பதைக் காரணம் காட்டி ஆடு, மாடு, ஒட்டகங்களை சாப்பிட மறுக்கும் இவர்கள் கொல்லாமல் தாமாகச் செத்துவிட்ட உயிரினங்களைச் சாப்பிட நாங்கள் தயார் என்று கூற வேண்டும். ஏனெனில் அதை இவர்கள் கொல்லவில்லை. செத்த பின் அதைத் துண்டு துண்டாக வெட்டினாலும் அது வலியை உணராது. எனவே இதைச் சாப்பிடுவார்களா? முட்டை சாப்பிடுவார்களா? செத்த மீன்களைச் சாப்பிடுவார்களா? சாப்பிட மாட்டார்கள். இவற்றையும் சாப்பிடக் கூடாது என்றே அவர்கள் கூறுவார்கள். அப்படியிருக்க ஏன் போலியான காரணம் கூற வேண்டும்? ஆக இவர்களின் வாதப்படி முஸ்லிம்கள் அல்லாஹ் அனுமதித்த விலங்குகளை அறுத்து உண்பதை தடுப்பதற்கோ, தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்கோ எவ்வித நியாயமும் இல்லை.

வெறுமனே முஸ்லிம்கள் மீது கொண்ட பொறாமையும், இஸ்லாம் மீது கொண்ட பயமும் தான் இவர்கள் இப்படி பேசுவதற்கான காரணம் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

source: jaffnamuslim

No comments:

Post a Comment