Saturday, July 12, 2014

பொதுபல சேனாவுக்கு தேசிய ஷூறா சபை​யின் பதில்


தரிக் மஹ்மூத் - தலைவர்
​​​
தேசிய மட்ட முஸ்லிம் நிறுவனங்கள், முஸ்லிம் ​சமுதாயத்தின் புத்திஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை உள்ளிட்ட நாடளாவியரீதியான ஒரு கூட்டமைப்பாகிய தேசிய ஷூறா (ஆலோசனைச்) சபையைத் தடைசெய்யுமாறு பொது பல சேனா விடுத்த வேண்டுகோளையிட்டு நாம் வியப்படையவில்லை. பொய்களை அடிப்படையாகக் கொண்ட பகைமையைப் பரப்பி இந்த நாட்டின் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த சமாதானத்தையும், ஒற்றுமையையும், சகவாழ்வையும் இல்லாதொழிப்பதற்கு அரும்பாடுபடும் ஒரு அமைப்பே பொது பல சேனா என்பதை அவ்வமைப்பின் இந்த வேண்டுகோள் தெளிவாகக் காட்டுகின்றது.

இலங்கை துண்டாடப்படு, “தமிழ் ஈழம்” ஒன்றை உருவாக்குவதற்குப் பெரும் முயற்சி செய்த நோர்வே நாட்டின் பூரண அனுசரனையுடன் 2011ஆம் ஆண்டில் அந்நாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்ட பொது பல சேனா, அங்கு புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும், நோர்வே நாட்டு இஸ்லாமிய வெறுப்புணர்வாளர்களையும் சந்தித்ததைத் தொடர்ந்து, இன முரண்பாடுகளின் ஊடாக இலங்கையைச் சீர்குலைப்பதை நோக்காகக் கொண்ட முஸ்லிம் விரோத விஷமத்தைப் பரப்புவதற்கான வஞ்சகமான செயற்திட்டம் ஒன்றை பொறுப்பேற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதன் மூலம் நோர்வே நாட்டின் பின்னணியில் உள்ள மேற்குலக சக்திகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பயன்பெறுவர். இந்த நாட்டில் பொது பல சேனா மேற்கொள்ளும் குற்றச் செயல்களுக்கெல்லாம் வருந்தத்தக்கவாறு இலங்கை பதில் கூற வேண்டிய நிலையில் உள்ளது.

பொது பல சேனாவின் முதலாவது இலக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்பதை நாம் மறக்கவில்லை. அதன் தலைவர் இலங்கைக்கு எதிரான மேற்குலகத்தின் அனுசரணையிலான தீர்மானத்தை எதிர்த்து நாட்டைப் பாதுகாப்பதற்காக 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக் குழு முன் சென்றதையும் இங்கு நினைவூட்ட விரும்புகின்றோம். இது குறித்த தீர்மானத்தின் மூலம் முஸ்லிம்களுக்குக் கிடைக்கும் இலாபத்தை அற்பமெனக் கருதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மேற்கொண்ட தேசப்பற்று மிக்க பங்களிப்பாகும். ஆனால், அதன் பின்னர் அதிர்ச்சியூட்டும் வகையில் பொது பல சேனா அதன் தேச துரோக நடவடிக்கையாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கும் முஸ்லிம்களுக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஹலால் பிரச்சினையை முன்னெடுத்தது. ஹலால் சன்றிதழ்கள் பிரதானமாக முஸ்லிம்கள் அல்லாத ஏற்றுமதியாளர்களுக்கே பயனளித்தது என்பதை வர்த்தக சம்மேளனம் நன்கறியும். பொதுபல சேனா சிங்கள ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைத்த அனுகூலத்தை புறந்தள்ளிவிட்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை சார்பான முஸ்லிம் நிறுவனம் ஒன்றாகத் தனது பங்களிப்பை நல்கிக்கொண்டிருந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மீது மன்னிக்கவே முடியாத ஒரு தாக்குதலை மேற்கொண்டது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மீதான பொது பல சேனாவின் அவதூறான தாக்குதல் அது வகிக்கும் தேச துரோக நிலைப்பாட்டை தெளிவாகக் காட்டியது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஜெனிவாவில் இருந்து திரும்பி ஒரு மாதத்தினுள், பொது பல சேனா உருவாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தம்புள்ள பள்ளிவாசல் அச்சுறுத்தலை எதிர்நோக்கியது. அதனைத் தொடர்ந்து, குறிப்பாக தம்புள்ள பிரச்சினை தொடக்கம் அளுத்கம வன்முறை வரை பொது பல சேனாவினால் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான இனவாதப் பிரசாரத்தினால் இந்த நாட்டின் சாதாரண அப்பாவி முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஓர் இலக்காக எவ்வாறு மாற்றப்பட்டுள்ளனர் என்பதை நாம் கண்கூடாகக் கண்டோம்.

முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவினால் எழுப்பப்பட்ட ஒவ்வொரு பிரச்சினையும் பொய்யானவையும், புனையப்பட்டவையும் அல்லது மிகைப்படுத்தப்பட்டவையும் ஆகும்.

ஜூன் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் அளுத்கமையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை நேரடியாக பொது பல சேனாவின் செயலாளரின் பகைமையுணர்வு மிக்க வெறித்தனமான உரையைத் தொடர்ந்து ஏற்பட்டது. அந்த உரை அளுத்கமை மற்றும் பேருவலை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் செயல் என்பதனை எந்தவொரு சட்டத்துறை பாடநூலைக் கற்ற மாணவனும் நன்கறிவான். முஸ்லிம்கள் யாருக்கும் விளக்கிக் கூறாமலே உண்மையை முழு உலகுமே ஓர் இரவினுள் அறிந்துகொண்டது.

அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறியர்களைத் தூண்டி விட்ட இவர்கள், அதனால் ஏற்பட்ட வடு எமது தாய் நாட்டையும் உலகளாவிய ரீதியில் பௌத்த மதத்தையுமே சாரும் என்பதை ​எண்ணிப்பார்த்தார்களா? மத்திய கிழக்கு நாடுகளில் முஸ்லிம் நாடுகளில் வியர்வை சிந்தும் மில்லியன் கணக்கான சிங்கள சகோதரர்களுக்கு இவர்கள் தலைகுனிவை ஏற்படுத்தவில்லையா? பொது பல சேனா பதில் கூறவேண்டிய இலங்கையை அவமதிப்புக்கு உள்ளாக்கிய அளுத்கமையில் மேற்கொள்ளப்பட்ட வெறுப்பூட்டும் உரைகளும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அழிவுகளும் தேச துரோகம் இல்லையா? இன்றேல், அது என்ன?

பேருவலயில் உள்ள உலகப் புகழ்பெற்ற புகாரி பள்ளிவாசலின் சேஹ் அவர்களின் அழைப்பை ஏற்று ஐக்கிய அமெரிக்காவின் அனுசரணையிலான இலங்கைக்கு எதிரான தீர்மானம் முஸ்லிம்களுக்கு நன்மையளிக்கும் என்பதையும் பொருட்படுத்தாமல், அதனை எதிர்த்து 2012 மார்ச் 15ஆம் திகதி ஐக்கிய அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அளுத்கம மற்றும் பேருவல முஸ்லிம்களே அன்றி பொது பல சேனா அல்ல என்பதனை நாம் மறக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் கூட, முஸ்லிம்கள் தமது சமுதாயத்துக்குக் கிடைக்கும் பயன்களைத் தியாகம் செய்து நாட்டின் தேசிய நலனைக் கவனத்தில் கொண்டு செயற்பட்டார்கள். இப்பொழுது பொது பல சேனாவின் அளுத்கமை உரையை ‘யூ ரியூப்’ (YouTube) மூலம் செவிமடுத்துவிட்டு, பொருளாதாரத்தை நாசம் செய்வதற்கு சிங்கள இளைஞர்களைத் தூண்டி விட்டு அதன் மூலம் பலம் பொருந்திய ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராகப் போராடிய அதே அளுத்கமை, பேருவல முஸ்லிம்களின் இதயத்தைத் சிதைப்பது பௌத்த துறவி ஒருவருக்குப் பொருத்தமான செயல்தானா என்று இந்த நாட்டுக்குக் கூறுங்கள். இவை பொது பல சேனாவினால் மேற்கொள்ளப்பட்ட நாட்டுக்கு எதிரான குற்றச் செயல்கள் அல்ல என்றால், அவற்றை என்னவென்பது?

இப்போது பொது பல சேனா நாட்டுக்குப் பாதகமான விதத்தில் சக்கரத்தை ஒரு முறை முழுமையாகச் சுழற்றியூள்ளது. தேசிய வாத பௌத்த துறவிகள் தம்மைப் பாதுகாப்பார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு அளுத்கமை முஸ்லிம்கள் உரித்துடையவர்களாக இருந்தனர். ஆனால், ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிராகப் போராடிய அதே முஸ்லிம்கள் சார்பாக மிகவும் உறுதியாகப் பரிந்து பேசியதும் அமெரிக்காவே. பொது பல சேனா தேசத்துக்கு எதிரான அதன் கேலிக்கூத்துகள் மூலம் சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையே அதற்கு இருந்த நல்லெண்ணத்தை இழந்துவிட்டது. ஐக்கிய அமெரிக்கா அவர்களை வென்று விட்டது. பொது பல சேனா ஒரு தேச விரோத சக்தியாகும் என்பதை எவராலும் மறுக்க முடியுமா? முழுப்பலத்துடன் பொது பல சேனா இருக்கும்வரை, இலங்கைக்கு வேறொரு எதிரி தேவையில்லை.

தேசிய ஷூறா சபையைத் தடைசெய்யூமாறு பொது பல சேனா கோரிக்கை விடுத்ததையிட்டு தேசிய ஷூறா சபை வியப்படையவில்லை. தேசிய ஷூறா சபையைச் சேர்ந்த நாம் பொது பல சேனாவைத் தடைசெய்யூமாறு கோரமாட்டோம். ஏனென்றால், பொதுபல சேனா பொய்யைக்கூறி நஞ்சூட்டுவதற்கு நாடிய இந்நாட்டு மக்களின் நெஞ்சங்களோடு உரையாடுவதற்கு நாம் விரும்புகின்றௌம். பொது பல சேனா எங்களைத் தடைசெய்து திரையை மூடுவதை விடுத்து இந்த வினாக்களுக்கு விடையளித்தல் வேண்டும். அளுத்கமையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்குப் பொறுப்பானவர்கள் அனைவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்படுதல் வேண்டும் என்பதில் நாம் அக்கறையூடன் உள்ளதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்குத் துணிந்த இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்ட சாதகமான நடவடிக்கைகளையூம் நாம் வரவேற்கின்றோம்.

தேசிய ஷூறா சபை ஒரு அரச சார்பற்ற நிறுவனம் அல்ல. நாடளாவிய ரீதியான முஸ்லிம் சமுதாயத்தின் புத்திஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை உள்ளிட்ட தேசிய மட்ட முஸ்லிம் நிறுவனங்களின் ஒரு கூட்டமைப்பாகும். அதன் தலைவராக முன்னாள் அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் மகன் தாரிக் மஹ்மூத் செயலாற்றுவதுடன் அது இலங்கையின் பல முன்னாள் வெளிநாட்டுத் தூதுவர்கள், பிரபலம் மிக்க உயர் தொழில் துறையைச் சார்ந்தவர்கள், இணைந்த முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோரைக் கொண்டுள்ளது. அவர்கள் எல்லோரும் பொது பல சேனாவின் தோற்றத்தின் பின்னர் ஒன்று சேர்ந்த தொண்டர்களாவர்.

தேசிய ஷூறா சபை முஸ்லிம் உலகில் வேறு எங்கேனும் ஷூறா என்ற சொல்லைக் கொண்டிருக்கும் எவருடனும் எவ்வித தொடர்பையும் கொண்டதல்ல. தேசிய ஷூறா சபைக்கு அதன் உறுப்பினர்கள் மற்றும் இணைந்த நிறுவனங்களின் தன்னார்வ பங்களிப்புகள் மூலம் நிதி கிடைக்கின்றது. எமது உள்நாட்டுப் பிரச்சினைகளை வேறு எங்கேனும் முன்வைப்பதற்கான வெளிநாட்டு அழைப்புகளையும் வெளிநாட்டு பணத்தையும் நாம் நிராகரித்துள்ளோம். சந்தேகத்துக்கிடமின்றி நாட்டுப்பற்றைக் கொண்டுள்ள ஒரு பாரம்பரிய, சுயமான தொண்டர்களின் குழுமம் என நாம் எம்மைஅடையாளப்படுத்த விரும்புகின்றோம். கடந்து செல்லும் பிரச்சினைகள் அனைத்தும் உள்நாட்டிலேயே தீர்க்கப்படக்கூடியவை என நாம் நம்புவதுடன் இந்நாட்டில் எல்லா சமூகங்களிடையேயும் நிலவும் நல்லெண்ணத்தின் ஆழத்தையும் நாம் நன்கறிவோம்.

No comments:

Post a Comment