Showing posts with label Al-Quran. Show all posts
Showing posts with label Al-Quran. Show all posts

Sunday, October 12, 2014

புகழ் என்பது எமக்குரியதல்ல...!


புகழில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. மதுபோதையை விட புகழ் போதை பயங்கரமானது. புகழில் மயங்கும் மனிதன் அடுக்கடுக்காக பாவங்களை செய்கிறான். பணம், பட்டம், பதவி, பொருள் முதலியவற்றால் ஒரு மனிதன் புகழ் அடையும் போது அவனை அறியாமலே அதில் மூழ்கி விடுகிறான். இஸ்லாம் புகழுக்குரியவனாக அல்லாஹ்வையே கூறுகிறது. மற்றவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டவை என்றே இயம்புகிறது.

புகழை ஏற்படுத்தும் மோகங்களில் இருந்து மனிதன் விடுபட்டு விட்டானென்றால் அவனிடம் அடக்கம், பணிவு அல்லாஹ்விடத்தில் கீழ்ப்படிவு எல்லாமே அமைந்து விடும். ஆசைகளிலிருந்து அவன் விடுபடாமல் இருப்பதே துன்பங்களுக்கெல்லாம் காரணமாக அமைகிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘மக்கள் சுட்டிக்காட்டிப் பேசும் அளவுக்கு ஒருவன் மார்க்க விஷயத்திலும் உலக விடயங்களிலும் பிரபலமடைந்து விட்டால் அது ஒன்றே அவனுக்கு போதிய தீங்கு விளைவித்து விடும். இதிலிருந்து தப்பியவர்கள் மிகச் சிலர்.

Wednesday, September 10, 2014

அரபு மொழி கற்போம்

டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நாம் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கின்றோமா இல்லையா என்பதை நமது குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன்மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு, காதல் - காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி. எங்கும் இஸ்லாத்தை சொல்லுவோம் எமது செயல்களால்....!


Wednesday, September 3, 2014

இஸ்லாத்திற்கு முரண்படாத கோட்பாடுகள் பாகம் - 02

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...

சென்ற பகுதியில் பெருவெடிப்பின் மூலம் உருவான கோள்களின் தோற்றத்தை பார்த்தோம்...

கோள்களின் இயக்கம்:


கோள்கள் நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றுகின்றன என்பதை முதலில் கெப்லர் (ஜெர்மன்) என்னும் விஞ்ஞானி கண்டறிந்தார். இதற்கு முன் டாலமியின் புவிமைய கோட்பாடே புழக்கத்தில் இருந்து வந்தது. இக்கோள்கள் தன்சுழலும் அச்சில் இருந்து அண்டவெளியில் அலைகின்றன, இவை குறிப்பிட்டகால வரையறையில் சுற்றுகின்றன என்பதை பின்னாளில் அறியப்பட்டது. (ஆதாரம்: The world book encyclopedia, NASA, Ames Research Center, California. USA). விஞ்ஞானிகளின் யூகங்கள் காலத்தால் மாறுபடும். நிருபிக்கப்பட்ட இவ்உண்மைகளை குரான் இவ்வாறு கூறுகிறது. 
"அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன." –(21:33) மேலும் (36:38,40),
"அவனே சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன". (13:2)
போன்ற வசனங்களிலும் காணலாம்.

Tuesday, September 2, 2014

இஸ்லாத்திற்கு முரண்படாத கோட்பாடுகள் பாகம் - 01

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...
(54:22) وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
(மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? (54:22)
பெருவெடிப்பு கொள்கை (bigbang theory )

விஞ்ஞானம், இந்த உலகத்தின் தோற்றம் பரிணாமத்தின் அடிப்படையில் பெருவெடிப்பு கொள்கையினால் உருவானது என்கிறது. 

பெருவெடிப்பு கொள்கையை பற்றி சற்று பார்ப்போம். இந்த பெரு வெடிப்புக் கோட்பாடுக்கு பல முந்துக் கோட்பாடுகளும் உண்டு. கி. பி. 1912ஆம் ஆண்டில் வெசுட்டோ சிலிப்பர் என்பவர் புவியில் இருந்து அனைத்து நெபுலாக்களும் தூரமாக நகர்ந்து செல்கின்றன என்பதை "டோப்லர் பாதிப்பு" என்ற முறையின் மூலம் அறிந்தார். ஆனால் இவர் பால் வழியின் உள்ளே உள்ள நெபுலாக்களுக்கு மட்டுமே இதைக் கண்டறிந்தார். அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து கி. பி. 1922ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளரும் ஆன அலெக்சாண்டர் ஃபிரெய்டு மென் அல்பர்ட் ஐன்ஸ்டீனின்பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து ஃபிரெய்டு மென் சமன்பாடு என்ற ஒன்றை உருவாக்கினார்.அதையும் நிலையான அண்டக் கொள்கையையும் வைத்து இந்த அண்டமே மொத்தமாக விரிவடையாமல் இருந்திருக்கும் என எடுத்துரைத்தார்.

Friday, February 1, 2013

வெள்ளிக்கிழமை

இறை நம்பிக்கை கொண்டவர்களே!
வெள்ளிக் கிழமையன்று தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள்.
கொடுக்கல் – வாங்கலை விட்டு விடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் – நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்! பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள்.
அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக் கூடும்.   அல் - குர்ஆன் (62:9-10)

Thursday, January 10, 2013

ஏன் பெண்கள் மட்டும் பர்தா அணிய வேண்டும்...?

பர்தாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய மதம் மட்டும்தான் இதை வழியுறுத்துகின்றதா? அல்லது தங்கள் மதத்தின் மீது இருக்கக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொள்ள முடியாமல் மற்றமதத்தின் மீது சேற்றை அள்ளி கண்ணை மூடிக்கொண்டு வீசுகின்றனரா? நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருட்டிவிடாது சகோதரர்களே! இதோ படியுங்கள் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் உங்களுக்கு நேர்வழி கிடைக்கட்டும்.

எனக்கு எழும் சந்தேகமெல்லாம் ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?

பெண்களின் அங்க அமைப்பைக் கருத்தில் கொண்டு இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாப் அணிந்து வலியுறுத்துவதுபோல், ஆண்களை வேறுவகையில் கட்டுப்பாடாக இருக்க வலியுறுத்துகிறது.

''(நபியே) முஃமினான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! ஆண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்''. (குர்ஆன் 24:30)

இதேபோன்ற கட்டளையை அதற்கு அடுத்த வசனத்திலேயே (குர்ஆன் 24:31) பெண்களுக்கும் வலியுறுத்துகிறது. இஸ்லாம் இயற்கைக்கு உகந்த மார்க்கம். ஆண்களின் உடலமைப்பிற்கும் பெண்களின் உடலமைப்பிற்குமுள்ள இயற்கையான வித்தியாசத்தை இஸ்லாம் உணர்ந்துள்ளது. அதனால்தான் பெண்களின் உடலமைப்பைக் கருத்தில் கொண்டு அறிவுப்பூர்வமான கட்டளையை வகுத்துள்ளது. மேலும், இவ்வசனத்தில் ஆண்களுக்குச் சொல்லப்பட்டதை பெண்களுக்கும், பெண்களுக்குச் சொல்லப்பட்டதை ஆண்களுக்கும் மாற்றிச் சொல்லி இருந்தாலும் கூட விமர்சிக்கப்படுவதோடு, நடைமுறைக்கு ஒவ்வாததும் கூட என்பதை எதார்த்தமாக சிந்திக்கும் எவருக்கும் 'சந்தேகம்' வராது.

மேற்கண்ட ஸந்தேகத்தை இந்தும்த திருமணங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள தாலி, மெட்டி விசயத்திலும் கேட்கலாம். (இதுதான் நியாயமும் கூட!) மேலும் கோவிற்சிற்பங்களில் ஆபாசங்கள் இருந்தாலும், பெண் கடவுள்களான லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, சீதை போன்றோர் சேலையுடனும், சிவன், முருகன், இராமன் போன்றோர் சட்டை இல்லாமலும் இருப்பதிலிருந்து, இந்து மதமும் பெண்களை உடல் ரீதியாக அவர்கள் கடவுளாகவே இருந்தாலும் வேறுபடுத்தியே பார்க்கிறது என்பது விளங்கும்.

Saturday, January 5, 2013

இஸ்ரேல் பிறந்தது எப்படி...?


அவர்கள் சிந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன்.


அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு.


இனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது? எப்படி உருவாக்குவது ?


அவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தவுராத்.’ பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள். தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டியிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப்பட்டது.


இதனை முதன் முதலாக எதிர்த்துக் குரல் எழுப்பியவர் அண்ணல் காந்தியடிகள் தான். தங்கள் தேசம் இருந்த இடம் என வேதம் வாக்களித்திருக்கிறது என்று கூறி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது. அப்படி இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப் படுவதை எதிர்க்கிறோம். அதனையும் மீறி அப்படி ஒரு நாடு உருவாக்கப்படுமானால் அதனை உலகம் அங்கீகரிக்கக் கூடாது. கண்டிப்பாக இந்தியா அங்கீகரிக்காது என்று அண்ணல் காந்தியடிகள் தெரிவித்தார்.


ஆனாலும், வட்டிக்காக கடன் பெற்றவளின் கண்களையே கேட்கின்ற அந்த யூத மகாப்பிரபுக்கள் ஜோர்டான் எல்லையை ஓட்டிய பாலஸ்தீனப் பகுதிக்குள் காலடி பதித்தனர்.


அரபு மக்கள் ஒரு வகையினர் நமது நாடோடி மக்களைப் போல் வசிக்கும் பழங்குடி மக்கள் . அவர்களுக்கு ஜோர்டான் எல்லையோரம் பாலஸ்தீனப் பரப்பிற்குள் சொந்த நிலங்கள் இருந்தன. அவைகள் ரோஜா தோட்டங்களோ, பேரீச்சை தோட்டங்களோ அல்ல. கள்ளிச் செடி மேலும் வானம் பார்த்த பூமி.


அந்த நிலங்களை யூத மகாபிரபுக்கள் வாங்கினர். விலை என்ன தெரியுமா? யானை விலை, குதிரை விலை என்பார்களே அதற்கும் அதிகம்தான். அப்படி வாங்கப்பட்ட இடங்களில் யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர்.


அப்போது அண்டையிலுள்ள அரபு நாடுகளெல்லாம் அவர்களுக்கு அனுதாபமாகவே இருந்தன. யூத இனத்தையே பூண்டோடு ஒழிப்பது என்பது ஹிட்லரின் லட்சியம். அதற்காக அவன் படை கொண்டு சென்ற நாடுகளிலெல்லாம் முதன் முதலாகச் செய்த கைங்கரியம் யூத மக்களை அழித்ததுதான். தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி உலகம் முழுமையும் ஓடிக்கொண்டிருந்தனர். 


இது அண்மைக் கால வரலாறு. ஆனால், சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஷியாவும், ஐரோப்பிய நாடுகளும் யூதர் என்றாலே முகம் சுளித்தனர். அவர்களை தண்டிக்கப்பட்ட மக்களாகவே கருதினர். அப்படி சரித்திரத்தால் சபிக்கப்பட்ட மக்கள் இங்கேயாவது இளைப்பாறட்டுமே என்று உண்மையில் அரபு மக்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டனர். 


அவர்கள் உருவாக்கிக் கொண்ட குடியிருப்பு நாளை தங்கள் எல்லைகளையே தீண்டப்போகும் மலைப்பாம்பு என்பதனையும் அதற்கு இரையாகப் போகும் மான்குட்டிகள்தான், அரபு நாடுகள் என்பதனையும் அப்போது அவர்கள் உணரவில்லை. அந்த மலைப்பாம்பு மெள்ள மெள்ள நெளியத் தொடங்கியது. தமது நீளத்தை காட்ட தொடங்கியது. சுற்றிலுமுள்ள அரபு நாடுகளுக்குள் தமது வாலினை நீட்டியது. அந்த நிலமெல்லாம் யூத சமுதாயத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உரிமையாக இருந்தது. 


எனவே, இப்போது தங்கள் மூதாதையர் விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தில் தங்களுக்குப் பாத்தியம் உண்டு என்று யூதர்கள் கோரிக்கை வைக்கவில்லை. அபகரிக்கவேத் தொடங்கினர்.


முதல் உலகப் போருக்குப் பின்னர் பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்தது. பாலஸ்தீனத்தில் யூதர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்துவதை பிரிட்டன் ஊக்கப்படுத்தியது. காரணம் அந்த நாட்டை விட்டு வெளியேறினாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் -அரபு நாடுகளுக்கு மத்தியில் ஒரு ஏவல் பிராணியை வளர்த்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. பின்னர் பிரிட்டனுக்கு துணையாக அமெரிக்காவும் வந்தது.


பாலஸ்தீனத்திற்குள்ளேயே யூதர்களின் குடியிருப்புக்கள் பெருகின. பின்னர் இணைந்தன. தங்கள் பூமிக்குள் ஓர் கள்ள தேசம் உருவாவதை அப்போதுதான் பாலஸ்தீன மக்கள் நன்றாக உணரத் தொடங்கினர். எனவே, 1920ம் ஆண்டு முதன்முதலாக பாலஸ்தீன மக்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன. 


அடுத்த ஆண்டே இன்னொரு இனக்கலவரம். 1929 ம் ஆண்டு நடந்த மோதல் பயங்கரமானது. `ஹெப்ரான் படுகொலை’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த வெறித்தனமான மோதலில் ஏராளமான பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காரணம் யூதர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை பெற்றிருந்தனர். அத்தனையும் அமெரிக்க தயாரிப்புத் தான்.


1936ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் யூத ஆதிக்கத்தை எதிர்த்து வெகுண்டெழுந்தனர். அந்த எழுச்சி 1939 ம் ஆண்டு வரை பொங்கும் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் யூதக் குடியிருப்புக்களுக்கு உதவியாக பிரிட்டனும், அமெரிக்காவும் பெருமளவில் ஆயுத உதவிக்கள் செய்தன. கரங்களாலும், கவண் கற்களாலும் பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வளவு காலம் போராட முடியும்?


பாலஸ்தீனத்திற்குள் யூதர்களுக்கு என்ன உரிமை என்பதனை தீர்மானிக்க பல்வேறு கமிஷன்களை பிரிட்டன் அமைத்தது. கடைசியாக இந்தப் பிரச்சனையை ஐ.நா மன்றத்திற்கு கொண்டு சென்றது இப்படி. பாலஸ்தீனத்தின் இதயத்தைப் பிளந்து உருவாகிவரும் இஸ்ரேலைஒரு நாடாக அங்கீகரிப்பது என்பதுதான் தீர்வாகும். 


எப்படி நமது துணைக் கண்டத்தை இந்தியா - பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக உருவாக்கியதோ, அதே போல பாலஸ்தீனம் அதற்குள் இஸ்ரேல் என்ற கோட்பாட்டை ஐ.நா மன்றத்தில் பிரிட்டன் முன்மொழிந்தது.


இந்த நிலையில்தான், இன்னொரு தேசத்தைத் துண்டாடி ரத்தக்கோடுகளால் இஸ்ரேல் என்று ஒரு நாட்டை உருவாக்குவதை உலகம் ஏற்கக்கூடாது என்று அண்ணல் காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார்.


ஆனாலும், அரபு மக்களின் தாயகமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப்படுவதை ஐ.நா மன்றம் அங்கீகரித்தது. அந்த மன்றம் அமெரிக்கா ஆட்டி வைக்கும் பொம்மை என்பதனை எத்தனையோ முறை மெய்பிக்கவும் செய்திருக்கிறது.


1947 ம் ஆண்டிற்கு முந்தைய உலக வரை படத்தை பாருங்கள். இஸ்ரேல் என்ற நாடே இடம் பெற்றிருக்காது. அதன் பின்னர் 


வெளியிடப்பட்ட உலக வரை படத்தைப் பாருங்கள் இன்றைக்கும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிற எல்லைகள் தெரியும். அதற்குள் இருக்கின்ற நாடுதான் இஸ்ரேல்.


‘இஸ்ரேல் என்ற நாட்டை இந்தியா அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனம் என்பது ஒரே பூமிதான். அதுதான் நாடு. அதைத்தான் அங்கீ கரிக்கிறோம்’ என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு முரசறைந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலம் வரை இஸ்ரேல் அங்கீகரிக்கப்படவில்லை. பாலஸ்தீன மக்களின் தானைத் தலைவராக விளங்கிய யாசர் அராபத்தை அழைத்து இந்தியா கவுரவித்தது.


உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஓர் யூதர். உருவாகும் இஸ்ரேல் நாட்டிற்கு அவரே முதல் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை யூதர்கள் மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் விரும்பின. இன்னொருவர் பூமியை ஆக்கிரமித்து உருவாக்கும் ஒரு நாட்டிற்கு தான் பிரதமராக இருக்க முடியாது என்று அறிவித்து ஐன்ஸ்டீன் விலகி விட்டார்.


ஆனாலும், 1948ம் ஆண்டு முதல் இஸ்ரேல் என்ற நாடு செயல்படத் தொடங்கியது. தேசமில்லாது அலைந்தவர்கள் ஒரு தேசத்தின் வரலாற்றை துப்பாக்கி முனையில் எழுதத் தொடங்கினர்.


1949 ம் ஆண்டு இஸ்ரேலிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்கள் இத்தனை ஆண்டுகளில் நாற்பது லட்சம் பேராக பெருகியிருக்கின்றனர். ஆனால் அவர்களெல்லாம் மீண்டும் வருவதற்கு அருகதையற்றவர்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துவிட்டது. அதே சமயத்தில் கொச்சியிலும், மணிப்பூரிலும் எத்தனையோ நூற்றாண்டுகளாக இருக்கும் யூதர்களை தங்கள் குடிமக்கள் என்று அழைத்துக் கொள்கிறது.


ஒரு நாடாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வலிமை வாய்ந்த ஆயுதச்சாலையாக இஸ்ரேல் தன்னை உருவாக்கிக் கொண்டது. இன்றைக்கு அமெரிக்காவிற்கு ஈடாக ராணுவ வல்லமை பெற்றிருக்கிறது.


பாலஸ்தீனத்திற்குள் உருவான பாம்புப் புற்றை அகற்றுவதற்கு எகிப்து, சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் கூட்டாக முயன்றன. அப்போதுதான் இஸ்ரேலின் ராணுவ வலிமை வெளிப்பட்டது. இஸ்ரேலின் கரங்கள் தான் உயர்ந்தன.


அந்த மோதலைப் பயன்படுத்தி அண்டை நாடுகளின் பரப்பளவுகளை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பிரதேசங்களும் தங்கள் வேதம் சொல்லும் தங்களின் புனித பூமிதான் என்று வன்முறை வாதம் செய்தது. அனுமானங்கள் தான் அதற்கு அடையாளங்களாம். பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற்றப் பட்ட மக்கள் அண்டை நாடுகளில் குடியேறினர். 


அந்தக் குடியிருப்புகளெல்லாம் தங்கள் தேசத்திற்கு ஆபத்தானவை என்று கூறி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. அதற்குத் துணை அமெரிக்காதான். தமது ஆயுத வியாபாரத்திற்கு இஸ்ரேல் நல்ல சந்தை என்று அந்த நாடு கருதுகிறது. இப்படி இன்று வரை பாலஸ்தீன மக்களின் ரத்தத்தில்தான் இஸ்ரேல் நீராடிக் கொண்டிருக்கிறது. 1967 ம் ஆண்டு எகிப்தின் மீது படையெடுத்த இஸ்ரேல் அதன் காசா பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. ஜோர்டான் மீது படையெடுத்து மேற்குக் கரையை ஆக்கிரமித்துக் கொண்டது.


1982ம் ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்தது. எல்லை நெடுகிலும் அந்த நாட்டிற்குள் தங்கியிருந்த 3 ஆயிரத்து 500 பாலஸ்தீனியர்கள் படு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் ஆயுதங்களே இல்லாத அப்பாவி மக்கள். அந்தப் படுகொலைக்கு இஸ்ரேலிலிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. 


அதனால் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஓரியல் ஜரான் பதவி விலகினார். இந்த கொடுமைகள் கண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் வெகுண்டெழுந்தனர். ஆங்காங்கே மூர்க்கத்தனமாக இஸ்ரேல் படைகளுடன் மோதினர். ரத்த தடாகங்களில் அவ்வப்போது வெற்றி மலர்கள் மணம் வீசவே செய்தன.


ஆனாலும் பூச்செண்டுகளைக் கொடுத்தால் இஸ்ரேல் எரிகுண்டுகளை திருப்பிக் கொடுத்தது. எனவே பாலஸ்தீனிய மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர். அவர்களுடைய ஆயுதம் என்ன தெரியுமா? விளைந்த காடுகளில் பறவைகளை விரட்ட நாம் வீசும் கவண் கற்கள்தான் இஸ்ரேலின் ராட்சஷ ஆயுதங்களை வெற்றிகரமாக சந்தித்தன.


1987ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்கொள்ள ஹமாஸ் இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம் இளைய தலைமுறையின் போர் பாசறை. மேற்குக் கரையிலும், காசா பகுதியிலும் அந்த இயக்கத்தின் செல்வாக்கு சிகரம் தொட்டது. உண்மையில் அந்த இரு பரப்பிலும் சமூகப்பணிகளையும் மேற்கொண்டது.


பாலஸ்தீனிய மக்களை பயங்கர ஆயுத பலத்தால் அடிபணிய வைக்க முடியாது என்பதனை இஸ்ரேலுக்கு காலம் உணர்த்தியது. எனவே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரிக்க முன் வந்தது. 1993ம் ஆண்டு ஓஸ்லோ நகரில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த மாநாடு முழு வெற்றி என்று கூற முடியாவிட்டாலும், மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் சுயாதிக்க அமைப்புகளை பாலஸ்தீன மக்கள் அமைக்கலாம் என்று அந்த மாநாடு முடிவு கண்டது.


அதனைத் தொடர்ந்து பலப் பல மாநாடுகள் நடந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர் கிளிண்டன் ஓர் மாநாடு கூட்டினார். பாலஸ்தீனியத் தலைவர் யாசர் அராபத்தும், இஸ்ரேலியப் பிரதமர் எகுட்பாராக்கும் கலந்து கொண்டனர். உடன்பாடு ஏற்படவில்லை.


ஆனால் அதே சமயத்தில் இழந்த தங்கள் தேசத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள் அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறார்கள்.


மேற்குக் கரையும் காசா பகுதியும் தான் இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனம். அங்கே ஒருநாள் கூட மக்கள் நிம்மதியாக உறங்கியதில்லை.


2006 ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் தீர்ப்பு அறிய அந்தத் தேர்தல் ஓர் வாய்ப்பு என்று ஐ.நா. மன்றமும் கருதியது. தேர்தலில் காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் மகத்தான வெற்றி பெற்றது. மேற்கு கரைப் பகுதியில் மிதவாத அரசு அமைந்தது.


ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசை அங்கீகரிக்க மாட்டோம் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து காசா பகுதியை கலவர பூமியாகவே வைத்திருக்க பிரியப்படுகின்றன. தங்கள் அரசை அங்கீகரிக்க மறுக்கும் இஸ்ரேலை, ஹமாஸ் இயக்கமும் அங்கீகரிக்கவில்லை. தங்கள் தாயகத்தின் இதயப்பகுதியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவோம் என்று ஹமாஸ் இயக்கம் சூளுரைத்து செயல்படுகிறது.


எனவே ஏதாவது ஒரு காரணம் கூறி காசா பகுதிக்குள் அவ்வப்போது இஸ்ரேல் படையெடுக்கிறது. ஒரு பக்கம் வான்வழித் தாக்குதல் - இன்னொரு பக்கம் கடல்வழித் தாக்குதல் - தொடர்ந்து தரைவழித் தாக்குதல் என்று சமீபத்தில் கூட மூர்க்கத்தனமாக தாக்குதலைத் தொடர்ந்தது. காசா பகுதியில் இன்னொரு ரத்த ஆறு ஊற்றெடுத்தது. ஆனாலும் பாலஸ்தீன மக்கள் அடிபணியவில்லை.


மூன்று வார அநியாய யுத்தத்திற்குப் பின்னர் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலே அறிவித்திருக்கிறது. ஈவிரக்கமற்ற இஸ்ரேல் படையெடுப்பை ஐ.நா. மன்றம் ஒரு மனதாகக் கண்டித்திருக்கிறது. இன்றைக்கு உலகத்தின் முன்னால் ஆக்கிரமிப்பு நாடு வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது.


முன்னாள் பாலஸ்தீனிய மக்களுக்கு கவண் கற்கள்தான் ஆயுதம். ஆனால் இன்றைக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பறக்கின்றன. இன்னொரு பக்கம் தரைவழிப் போரில் பாலஸ்தீனிய மக்களை வெல்ல முடியவில்லை. எல்லைகளை முறித்துக் கொண்டு நுழையும் டாங்கிகளை அவர்கள் அப்பளங்களாக நொறுக்குகிறார்கள்.


இன்றைக்கு மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய சக்திகளின் பயங்கர ஆக்கிரமிப்புக்களை பார்க்கிறோம். அரசு பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு இஸ்ரேல் இலக்கணம் வகுத்துக் கொண்டிருக்கிறது.


ஹமாஸ் இயக்கம்தான் காசா பகுதிக்கும் மேற்குக் கரைக்கும் உண்மையான அரசியல் இயக்கம். அதனை அழித்தொழிக்காது கண் துஞ்ச மாட்டோம் என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொக்கரிக்கிறார்கள். 


ஆனால் சர்வவல்லமை படைத்த அந்த ஆக்கிரமிப்பாளர்கள் அவ்வப்போது சோர்ந்து போகிறார்கள். அதனால் போர் நிறுத்தம் என்கிறார்கள்.


பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் மிதவாத ஆட்சி அமைந்தாலும் முழு பாலஸ்தீன மக்களின் அங்கீகாரம் பெற்ற மாபெரும் இயக்கமாக ஹமாஸ் தலை நிமிர்ந்து நிற்கிறது. அதனைப் பணிய வைக்க அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சில அரேபிய நாடுளே துணை நிற்கின்றன என்பது வேதனை தரும் செய்தி. எனினும் பாலஸ்தீனம் இமயம் போல எழுந்து நிற்கும்.


வலல ரஹ்மான் பாலஸ்தீனிய மாக்களுக்கு மென்மேலும் வெற்றியை தருவானாக என்று பிரார்த்தனை செய்தவனாக............!

தமிழில் டைப் செய்வது எப்படி?

சமூக வலைத்தளங்களில் தமிழில் டைப் செய்வதற்கு மிகச் சிறந்த ஒரு முறையை இதோ உங்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.
  1. கீழுள்ள link ஐ click செய்து  InputToolsSetup.rar என்ற file ஐ download செய்யுங்கள்.
  2. InputToolsSetup.rar 
  3. InputToolsSetup.rar file ஐ  winrar அல்லது winzip மூலம் extract செய்து Input ToolsSetup.exe ஐ double click செய்து  install செய்யுங்க .
  4. இனி Desktop இன் அடியிலுள்ள டாஸ்க் பார் இல் TA Tamil (India) என்பதை select செய்யுங்க. 
  5. நீங்க செய்ய வேண்டியது அவ்வளவுதான் 
  6. இனி எங்கு வேண்டுமானாலும் தமிழில் சுலபாமாக தட்டச்சு செய்யலாம்.

.... பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க ...


Tuesday, December 18, 2012

இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…
சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.
இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் “How the Bible Led me to Islam” என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.
அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.
“நான் தெற்கு கரோலினாவின் Greenville பகுதியைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே என் தாய் எங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தையோ இரண்டு வேலைகளில் இருந்தார். அதனால் நான் என் தாத்தா-பாட்டி கவனிப்பில் தான் வளர்ந்தேன். மிகுந்த கட்டுப்பாடு உள்ள குடும்பம். அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கூட (Methodist church).
நான் கிருத்துவத்தை விரும்பி என்னை அதனுடன் இணைத்துக் கொண்டவன். 12-13 வயதில் என்னை சர்ச்சின் இளைஞர் சேவைகளில் (Youth Services) இணைத்துக் கொண்டேன்.
அப்போது எனக்கு பதினைந்து வயதிருக்கும், என் நெருங்கிய நண்பருக்கு பதினேழு வயதிருக்கும். அவர் பாரம்பரியமிக்க பாப் ஜோன்ஸ் பல்கலைகழகத்தில் (Bob Jones University) புத்தக ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருந்தார். அப்படியென்றால், ஒரு நூலை எடுத்துக்கொண்டு அது எங்கிருந்து வந்தது, யார் எழுதினார்கள் என்பது போன்ற விஷயங்களை ஆராய்வது.
ஒருமுறை அந்த நண்பர் கேட்டார்,
“நீ பைபிளை படித்திருக்கிறாயா”
எனக்கு ஆச்சர்யம், “அதைத் தானே நாம் சர்ச்களில் செய்து கொண்டிருக்கிறோம்”
“இல்லை இல்லை நான் கேட்பது, நீ பைபிளை முழுவதுமாக படித்திருக்கிறாயா, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை”
நாங்கள் பைபிளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தவர்கள். முழுவதுமாக படித்தவர்கள் என்று எனக்கு தெரிந்து யாரும் கிடையாது.  புரிந்தது, அதைத்தான் அவர் கேட்கிறார்.
அவர் தொடர்ந்தார், ”பைபிள் இறைவனின் வார்த்தைகள் என்று சொல்லக்கூடிய நாம் அதை ஏன் முழுமையாக படிக்க முயலவில்லை”
அவருடைய கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. ஆம் அவர் கேட்பது நியாயம்தான்.
பிறகு அவர் கூறினார், “நாம் ஏன் பைபிளை முழுமையாக படிக்கத் துவங்கக்கூடாது?”
சரி, முழுவதுமாக படித்து விடுவோம் என்று “Genesis” (The first book of Old Testament) இல் இருந்து துவங்கினேன்.
அதிர்ச்சிகள் பல காத்திருந்தன…
ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சிகள். நான் என் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் கொண்டிருந்த நபிமார்களா இவர்கள்?
உதாரணத்துக்கு, பைபிள், நூஹ் (அலை) அவர்கள் குடிகாரராக இருந்ததாக குறிப்பிடுகிறது. லூத் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்களையோ……………..
(மிகவும் சென்சிடிவ் தகவல்கள் என்பதால் தவிர்க்கப்படுகிறது).
இந்த நபிமார்களின் நல்ல தன்மைகளையே பாதிரியார்கள் எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே போய் படித்துப் பார்த்தால் என்னென்னவோ இருக்கிறது.
  • நபிமார்கள் இறைவனின் நற்செய்தியை கொண்டு வந்தவர்கள் அல்லவா?
  • அவர்கள் தானே நமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்?
  • அவர்களைத்தானே நாம் வாழ்விற்கு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்?
ஆனால் இங்கே அவர்களே பெரும் தவறு செய்பவர்களாக இருக்கிறார்களே…இதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்? எப்படி இவர்களை பார்த்து என் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்?
புரியவில்லை. மிகுந்த அதிர்ச்சி. Old Testament முழுவதும் இப்படி பல முரண்பாடுகள். என் பாஸ்டரிடம் சென்று கேட்டேன். அதே பதில், program செய்யப்பட்ட பதில். எல்லா பாஸ்டர்களும் சொல்லுவார்களே,
“இது நம்பிக்கை சம்பந்தபட்ட விஷயம், கடவுளை உள்ளூர உணர வேண்டும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது”…
அதையேத்தான் அவரும் கூறினார். “சரி, நீ New Testament படி, அதுதான் ஜீசஸ் (அலை) பற்றி பேசுகிறது”.
சரியென்று “New Testament” டை படிக்க ஆரம்பித்தேன்.
இங்கே துவக்கத்திலேயே குழப்பம். ஏனென்றால், Mathew, Mark, Luke and John என்று இவற்றை எழுதியவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. இப்போது மேலும் குழப்பம்.
ஈசா (அலை) அவர்கள் மூவரில் ஒருவர், கடவுளின் மகன் என்றெல்லாம் சர்ச்களில் படித்திருக்கிறோமே, இங்கே “New Testament”ல், ஈசா(அலை) அப்படியெல்லாம் கூறவில்லையே? அதுமட்டுமல்லாமல் old Testament முழுவதும் ஒரே கடவுள், ஒரே கடவுள் என்றுதானே இருக்கிறது. இது இன்னும் முரண்பாடாக அல்லவா இருக்கிறது. இப்போது மேலும் மேலும் குழப்பம்…
என்ன செய்வது? மறுபடியும் பாஸ்டரிடம். இந்த முறையும் அதே பதில்.
“இது நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம், நம்ப வேண்டும்”
பிறகு என் நண்பர் பைபிளை பற்றி நன்கு தெரிந்த தன் பேராசிரியர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் கூறினார்,
“இங்கே பாருங்கள், பைபிள் பல காலங்களில் பல பேரால் மாற்றப்பட்டு வந்துள்ளது.  அதனால் இது perfect Book இல்லை. நம்பிக்கையால் தான் இந்த புத்தகம் பூரண படுத்தப்பட்டுள்ளது. இதை நம்பிக்கையால் தான் நம்புகிறார்கள். (This is not a textually perfect book. But this is the book perfected through faith)”
என்ன? இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து, அதை உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொல்லுவானா?


அதற்கு நம்மை சிந்திக்கும் திறன் இல்லாமலேயே படைத்திருக்கலாமே?


என் பாட்டி என்னை முட்டாளாக வளர்க்கவில்லை. பல காலங்களில் மாற்றப்பட்ட ஒரு நூலை எப்படி நான் கடவுளின் வார்த்தையாக நம்ப முடியும்? இதை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும்?  நிச்சயமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை.


1982 மாடல் காரை ஒருவர் கொண்டுவந்து, “நம்பு இது லேட்டஸ்ட் மெர்சிடிஸ் கார். நீ நம்பிக்கையுடன் பார்த்தால் அது உனக்கு மெர்சிடிசாக தெரியும்” என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கு.


கிருத்துவத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

சரி பைபிளில் தான் பதிலில்லை, மற்ற மதங்களில் தேடுவோம் என்று Judaism, Hinduism, Buddism, Taoism என்று எல்லா இசத்திலும் (ism) தேடினேன். மற்ற மதத்துக்காரர்களை பார்க்கும்போது நான் அவர்களிடம் விளக்கமெல்லாம் கேட்க மாட்டேன், ஒரே ஒரு கேள்வியைத் தவிர.
அது, உங்களிடம் உங்கள் மதம் பற்றிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்பது மட்டும்தான்.
ஏனென்றால் அவர்கள் பேசக் கூடாது, அவர்கள் புத்தகம் தான் பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல், “உங்கள் மதம் உண்மையென்றால் அதற்கு சான்றாக நீங்கள் எதையாவது எடுத்து வையுங்கள். இனிமேலும் நம்பிக்கையால் தான் இது உண்மை என்பது போன்ற வாதங்களை நம்ப நான் தயாரில்லை. ஆதாரத்தை எடுத்து வையுங்கள்”.
பகவத் கீதை முதற்கொண்டு பல நூல்களை படித்தேன். ஏன், மந்திரம் சூனியம் சம்பந்தப்பட்ட நூல்களைக் கூட படித்திருக்கிறேன். அதில் கூட உண்மையை தேடியிருக்கிறேன்.
நான் பார்த்தவரை எல்லா புத்தகங்களிலும் கடவுளைப் பற்றிய நல்ல பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்று கூட முழுமையாக அறிவுக்கு ஒத்துவரவில்லை.
நான் இஸ்லாமை கணக்கிலேயே கொள்ளவில்லை. ஏனென்றால் இஸ்லாம் மிகச்சிறிதே அறியப்பட்ட காலம் அது.
பலவித தேடல்களுக்கு பிறகு வெறுத்து போய் விட்டேன். பதினேழு வயதிருக்கும், கடவுளைப் பற்றிய தேடலை நிறுத்தி விட்டேன்.
இறைவன் மீது மிகுந்த கோபம். நான் அவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடுகிறேன். ஆனால் அவன் எனக்கு எந்த ஒரு உதவியும் புரியவில்லை.
பின்னர் திசை மாறியது. பார்ட்டிகள், குடி என்று வாழ்க்கை மாறியது. ஒரு நாள் நானும் என் நண்பரும் குடிபோதையில் கார் ஒட்டிச் சென்றபோது பெரும் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். அப்போது ரோந்து வந்த அந்த அதிகாரி சொன்னார், “உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார், அதனால் தான் நீ இப்போது உயிரோடு இருக்கிறாய்”
நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதானவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டுவிட்டேன். நான் கடவுளை தேடினேன், அவன் எனக்கு உதவி புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது? இது என்னுடைய தவறில்லையே…
நாட்கள் சென்றன. அதுபோல மற்றுமொரு சம்பவம். இந்த சமயம் துப்பாக்கி முனையில் இருந்து தப்பினேன். இப்போது என் பாட்டி முன்னர் அந்த அதிகாரி சொன்ன அதே வார்த்தைகளை கூறினார், ”உன் மூலமாக  கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார்”
ஒருமுறை நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,
“முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கிற அல்லாஹ் என்ற “Moon God” டை வணங்குகிறவர்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாத யாரைக்கண்டாலும் கொன்று விட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் ஜிஹாத், அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்” என்று என்னென்னவோ இருந்தது.              
அவ்வளவுதான், அப்படியே அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். “நல்ல வேலை தெற்கு கரோலினாவில் முஸ்லிம்கள் யாரையும் நான் பார்த்ததில்லை”
பிறகு ஒரு முஸ்லிமை சந்தித்தேன். அவர் என்னுடன் பள்ளியில் படித்தவர்தான். ஆனால் அவர் முஸ்லிமாக இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவர்தான் ஆப்ரிக்க அமெரிக்கர் ஆயிற்றே, முஸ்லிம்கள் என்றால் அரேபியர்கள் என்று தானே அந்த புத்தகத்தில் போட்டிருந்தது. இரண்டு, முஸ்லிம்கள் என்றால் யார் என்று போட்டிருந்த அந்த புத்தகத்தில், அவர்கள் பகுதி நேர போதை மருந்து வியாபாரிகளாகவும் இருப்பார்கள் என்று போட்டிருக்கவில்லையே?
ஒரு வெள்ளிகிழமை, நண்பர்களுடன் மதங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த நண்பர் என் அருகில் வந்து,
“இஸ்லாமைப் பற்றி தெரியுமா?” என்று கேட்டார்..
“இஸ்லாமைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்” என்று நான் படித்தவை பற்றி கூறினேன்.
“So, இஸ்லாமைப்பற்றி என்ன நினைக்கிறாய்”
“நினைப்பதற்கு என்ன இருக்கிறது, நான் பார்த்த மதங்களிலேயே மோசமானது அதுதான்”
“உனக்கு தெரியுமா, நான் ஒரு முஸ்லிம்”
“நீ ஆப்ரிக்க அமெரிக்கன் அல்லவா?”
“ஆம், அதனால் என்ன?”
“முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தானே”
“என்ன?” ஆச்சர்யத்துடன் கேட்டார் அவர்.
“இங்கே பார், நான் ஒரு நல்ல முஸ்லிமல்ல. ஆனால், என்னால் உனக்கு சிலரை அறிமுகப்படுத்த முடியும். அவர்கள் உனக்கு இஸ்லாமைப் பற்றி தெளிவாக கூறுவார்கள். நான் இப்போது ஜூம்மாஹ்விற்கு போகிறேன். என்னுடன் நீயும் வா”
“ஜும்மாஹ் என்றால்?”
“ஞாயிற்றுகிழமை சர்ச்களில் நடக்குமே அதுபோன்றுதான். என்ன இங்கே நாற்காலிகள் கிடையாது” (அரங்கத்தில் சிரிப்பு)
“எங்கே இருக்கிறது மசூதி?”
அவர் கூறினார். அவர் சொன்ன அந்த இடம் என் தெருவில் தான் இருந்தது. அதற்கு பக்கத்தில் உள்ளே சர்ச்சில் தான் நான் மிசனரி பணிகளை செய்தேன். இத்தனை நாளாய் எனக்கு தெரியாது அங்கு மசூதி இருக்கிறதென்று.
அவருடன் சென்றேன். பள்ளிக்கு வெளியே காத்திருந்தேன். உள்ளே போனவர்கள் அனைவரும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அரேபிய நாடுகளை சேர்ந்தவர்கள் போல இருந்தார்கள். அமெரிக்கர்களை காண முடியவில்லை, ஒரே ஒரு ஆப்ரிக்க அமெரிக்கரை தவிர.
அப்போது ஒருவர் வந்தார், அவர் தான் இமாம் என்று பிறகு தெரிந்தது. அருமையான மனிதர். பண்பாக பேசினார். என்னை உள்ளே அழைத்து சென்றார். அந்த ஹாலின் கடைசியில் ஓரு நாற்காலி கொடுத்து உட்கார சொன்னார். என் முன்னே பலரும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு பின்னாலோ ஒரு திரை, திரைக்கு அந்த பக்கம் பெண்கள் குரல் கேட்டது.
என்னைச் சுற்றி முஸ்லிம்கள், நடுவில் நான். “என்னை ஜிஹாத் செய்யப் போகிறார்களா? இது அதற்குண்டான செட்அப்பா” ஒருவித பயம்.
பின்னர் குத்பா ஆரம்பித்தது “இன்ன அல்ஹம்துலில்லாஹ் நஹ்மதுஹு” என்று ஆரம்பித்தார் இமாம்.
அவ்வளவுதான் பயம் அதிகரித்தது…
“அடக் கடவுளே, சரியாப் போச்சு, என்னைப் பார்த்து தான் பேசுகிறார். நிச்சயம் ஜிஹாத் தான் நடக்கபோகிறது”, வெளியேறி விடலாம் என்றாலும் என்னைச் சுற்றி மக்கள்.
அந்த இமாம் நல்ல மனிதர் மட்டுமல்ல, அறிவாளியும் கூட. குத்பாவை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறிக்கொண்டிருந்தார். எனக்கு புரிய வேண்டும் என்பதற்காகவா?, இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா?, தெரியவில்லை. ஆனால் எனக்காகவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாக எனக்கு தோன்றியது.
இன்று வரை நன்கு நினைவிருக்கிறது அந்த உரை. என் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய ஒன்று அது. உரையின் தலைப்பு, “இறைவன் யாவரையும் மன்னிப்பான், இணைவைப்பவரை தவிர”. அதுமட்டுமல்லாமல், இப்ராஹீம் (அலை), மூசா (அலை) என்று பைபிளில் உள்ளே நபிமார்களின் பெயரை உச்சரித்தார். எனக்கு ஆச்சர்யம், இவர் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்தார்?
குத்பா முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள்.
“என்ன செய்யப் போகிறீர்கள்” என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டேன்.
“தொழ போகிறோம்”
“யாரை”
“இறைவனை”
“எந்த இறைவன்?”
“உலகில் உள்ள அனைத்தையும் படைத்தானே அவனை. பைபிளில் கூறப்படுகிறதே அவனை”
என்னுடைய கடவுளைத்தான் இவர்களும் வணங்குகிறார்களா?. எனக்கு புரிய ஆரம்பித்தது.
தொழுகை ஆரம்பித்தது. குரானின் வசனங்கள் ஓதப்படுவது அழகாக இருந்தது, மனதை ஊடுருவியது.
சஜிதா செய்தார்கள். “ஆ, இதுதானே நான் பல புத்தகங்களில் படித்தது”. முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை (Prayer) அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது வழிபாடு (Worship). இது தான் நான் இத்தனை நாளாய் எதிர்ப்பார்த்தது.
தொழுகை முடிந்தது. எனக்கு, என்னைப் பார்த்து மிக வெட்கமாய் இருந்தது (I am ashamed of myself). மற்ற மதத்து நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாய் இருந்தது.
தொழுகை முடிந்தவுடன் நேராக அந்த இமாமிடம் சென்றேன். முன்னர் அவரிடம் சிறிது கடுமையாக நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பின்னர் அவர் என்னிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்க முயன்றார். ஆனால் நான் அவரிடம்,
“இல்லை இல்லை, எனக்கு விளக்கம் தேவையில்லை. உங்களிடம் உங்களுக்கென்று புத்தகம் ஏதாவது இருக்கிறதா?”
“ஆம் இருக்கிறது, அதற்கு பெயர் குர்ஆன்”
“அதை நான் படிக்கலாமா”
“நிச்சயமாக, ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளுங்கள்”
எடுத்துக்கொண்டேன். அன்று இரவே படிக்கத் தொடங்கினேன். முதல் சூரா, அல் பாத்திஹா, பைபிளில் இருப்பது போன்று கடவுளை துதிக்கும் அழகான வார்த்தைகள். மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.
அதே பெயர்கள். ஆம் அதே நபிமார்கள். ஆனால் பெரிய வித்தியாசம். இங்கே இந்த நபிமார்கள், தூதர்களுக்குண்டான தன்மையுடன் இருக்கிறார்கள்.அவர்கள் கொண்டுவந்த இறைச்செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்க்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள்.
ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. ஈசா (அலை) அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று பார்க்க மிகுந்த ஆவல். சூரத்துல் அல் இம்ரான் போன்ற சூராக்களில் கூறப்பட்டிருந்த ஈசா (அலை) அவர்களது வரலாறானது நான் இதுவரை New Testament டில் படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக, தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா (அலை) இவர்தான்.
குரானை மூன்று நாட்களில் படித்து முடித்துவிட்டேன். ஆனால் முதல் இரவில் சூரத்துல் அல் இம்ரான் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்துவிட்டேன்.
முஸ்லிம்கள் என்றால் யார்,  எப்படி முஸ்லிமாவது என்று கூட அப்போது சரியாக எனக்கு புரிந்திருக்கவில்லை.
ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்களை போலத்தான் நானும் வாழவேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு  வழிகாட்டி.
“இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள், இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றை கொண்டுவாருங்கள்” என்று சவால்விடும் இதுபோன்ற ஒன்றை நான் இது வரை பார்த்ததில்லை.
கடவுளைப்பற்றிய அனைத்து விளக்கங்ககளும் அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குரானின் போதனைகள் நேரடியானவை, நேர்மையானவை.
அந்த இரவு என் மனதை முழுவதுமாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்து விட்டேன். அழுதேன், அழுதேன், அழுதுக்  கொண்டே இருந்தேன். உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தவன் நான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவன்.
ஆனால் அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது.
திங்கட்கிழமை அந்த பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்க போனேன். அதுமட்டுமல்லாமல்,இத்தனை நாளாய் நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள்? என்றும் கேட்க வேண்டும். ஆனால் பள்ளியோ பூட்டியிருந்தது. ஜும்மாஹ் மற்றும் இஷா தொழுகைக்கு மட்டும்தான் திறப்பார்களாம். எனக்கு தெரியாது. பின்னர் அடுத்த ஜும்மாஹ்வில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்…
இங்கு என் கதையை கூறுவதற்கு முக்கிய காரணம், என்னைப் போல எத்தனை பேர் இந்த உலகில் உண்மையைத் தேடி அலைகின்றனர் என்று பாருங்கள்.
நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 1998 ஆம் ஆண்டு மட்டுமே லட்சகணக்கில் இருந்திருக்க வேண்டும். அமெரிக்கா முழுவதும், கலிபோர்னியாவில், நியூயார்க்கில் என்று எங்கு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.
என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையை மறைப்பது முஸ்லிம்களாகிய நமக்கு அழகல்ல. அதனால் தயவுகூர்ந்து உங்களுடன் இஸ்லாம் என்ற உண்மையை மறைத்து வைத்துக் கொள்ளாதீர்கள். என்னைப் போல பலருக்கும் அது தேவைப்படுகிறது.
உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மிடம் தீர்வு உண்டு. இதை புரிந்து கொள்ளுங்கள்.
என் நண்பன் ஒருவன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை தீர்க்கக்கூடிய மருந்து எனக்கு கிடைத்து, அதை நான் அவனிடம் கொடுக்காமல் மறைத்தால் எப்படி இருக்கும்?
அதைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பலரும் இணைவைத்தல் என்ற தீவிர நோயால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். அறிகுறிகள் இல்லாத நோய் இது. நம்மிடம் அதற்கு இஸ்லாம் என்ற மருந்து இருந்தும் அதை நாம் மறைக்கிறோம், கொடுக்க மறுக்கிறோம்.
இங்கே நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாமலேயே இறக்கின்றனர்.
தாவாஹ் பல வழிகளில் செய்யலாம். நம் அனைவராலும் முடிகிற ஒன்றென்றால், அது நாம் முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவதுதான். ஆம், அது ஒரு மிகச் சிறந்த தாவாஹ். நீங்கள் முஸ்லிமென்பதை மறைக்காதீர்கள். ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் நற்பண்புகளுக்கு இஸ்லாம்தான் காரணம் என்று தெளிவாக புரிய வையுங்கள்.
என்னுடைய முக்கிய தாவாஹ் பணிகளில் ஒன்று என்றால் அது DVD project. அமெரிக்காவில் உள்ள எவரும் இஸ்லாமைப்பற்றி தெரியாமல் இருக்கக்கூடாது. இஸ்லாமைப் பற்றிய தகவல்களை டிவிடிக்களில் பதிந்து முஸ்லிமல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். நிச்சயமாக டிவிடிக்களை பலரும் பார்ப்பார்கள். இப்போது florida பகுதியில் என் கவனத்தை செலுத்தி வருகிறேன்.
நூறு டிவிடிக்கள் தயாரிக்கிறோம் என்றால் அதில் இருபத்தைந்தை முஸ்லிம்கள் வாங்கக் கொடுப்போம். ஏனென்றால் அவர்களும் தங்களை தாவாஹ் பணியில் இணைத்துக் கொண்டது போலாகும்.
அல்ஹம்துலில்லாஹ்…இந்த செயல் திட்டத்தால் மாதம் இருவர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.
நான் என் கதையை பொழுதுபோக்குக்காக சொல்லுவதில்லை. அதற்கு பின்னால் இருக்கும் செய்தியைத்தான் இதனால் சொல்ல விரும்புகிறேன்.
இப்போது நான் சொன்ன தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. நான் சொல்லியதில் தவறேதும் இருந்தால் அது என்னுடைய அறியாமையால் ஏற்ப்பட்டது.
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக…ஆமின்”
அல்ஹம்துலில்லாஹ்…
இஸ்லாம், அன்றும் சரி இன்றும் சரி, மிக வேகமாய் பலரையும் தன்பால் ஈர்த்து வருகிதென்றால், அதற்கு பின்னால் சகோதரர் எவன்ஸ் போன்ற கோடிக்கணக்கான உண்மையான முஸ்லிம்களும் ஒரு காரணம்.  இறைவன் இவருக்கு மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன உறுதியையும், உடல் வலிமையையும் அளிப்பானாக…ஆமின்.
நீங்கள் அமெரிக்காவில் வாழக்கூடிய மாணவராக இருந்தால், சகோதரர் எவன்ஸ் அவர்கள் உங்கள் கல்லூரிக்கு சொற்ப்பொழிவாற்ற வர வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நான் கீழே கொடுத்துள்ள அவரது வலைதளத்தில் அவரை தொடர்பு கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்…
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக…ஆமின்
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்…
Brother Yusha Evans Official website:
1. http://yushaevansdotcom
This Article translated from:
1. Br.Yusha Evans speach “How the Bible Led Me to Islam” on 6th Feb,2009 at Masjid Omar Al Farouk, Islamic Institute of Orange county, Anaheim, California.
Video downloaded from:
1. youtubedotcom
My Sincere Thanks to:
1. IIOC Internet committee reproduction.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

Tuesday, August 7, 2012

ரமழான் நற்சிந்தனை (அல் குர்ஆனை புரிந்து கொள்வோம்)

அல் குர்ஆன் மனிதனுக்கும், இறைவனுக்கும் இடையில் உறவை ஏற்படுத்துகிறது. அல் குர்ஆனுக்கூடாக ஒரு விசுவாசி உயர்ந்த ஆத்மீக தரத்தை அடைகிறான். அவனது சிந்தனைகளையும், எண்ணங்களையும் அது விரிவுபடுத்துகிறது. உலகின் அற்ப நோக்கங்களிலிருந்து அவனை விடுவித்து உயர்ந்த இலக்குகளுக்காக அவனை செயல்பட வைக்கிறது. 

அவனது ஆளுமை பண்புகளை விருத்தியடையச் செய்கிறது. இத்தகைய விளைவுகளை உண்டுபண்ணும் குர்ஆனுடனான எமது உறவு மிகவும் பலமானதாக அமைய வேண்டும்.அல் குர்ஆனை ஓதுவதோடு மாத்திரம் அதனூடான தொடர்பை நாம் நிறுத்திக் கொள்ளக் கூடாது. அல் குர்ஆனை ஓதுவது மிகப்பெரும் இபாதத். 

அல்லாஹ்விடத்தில் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தரும் செயலாக அல் குர்ஆனை ஓதுதல் காணப்படுகிறது. எனினும் குர்ஆனை ஓதுவதோடு அதனை புரிந்து கொள்ளவும் நாம் முனைய வேண்டும். குர்ஆனை அல்லாஹ் இறக்கியதன் நோக்கமே மனிதன் அதிலிருந்து வழிகாட்டல்களைப் பெறுவதாகும். அதன் பொருளைப் புரிந்து கொள்ளாமல், அதன் கருத்துக்களை விளங்காமல் எப்படி நாம் வழிகாட்டல்களை பெறமுடியும்.

குர்ஆனுக்கூடாக நாம் எப்படி தாக்கமடைய முடியும். குர்ஆன் கூறும் கருத்துக்களை சிந்திக்காது ஓதுவோரை குர்ஆன் மிகக் கடுமையாக கண்டிக்கிறது. எனவே இறைவனின் விருப்பமாகிய குர்ஆனை புரிந்து, வாழ்வில் செயற்படுத்தும் விசுவாசிகளாக எம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். எமது சக்திக்கு உட்பட்ட வகையில் குர்ஆனைப் புரிந்துகொள்ள முனைவோமாக.

தொகுப்பு:

அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர் 
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை